Thayagam Tamil Radio Australia

அவுஸ்திரேலியாவில் புதிய அரசாங்கத்திடம் இலங்கை குடும்பம் தொடர்பில் வலியுறுத்தல்-30

September 22, 2022

அவுஸ்திரேலியாவில் நிச்சயத்தன்மையற்ற நிலையில் சிக்கியுள்ள இலங்கை தஞ்சக் கோரிக்கையாளர் குடும்பமொன்று தொடர்பில் அவுஸ்திரேலியாவின் புதிய அரசாங்கத்திடம் அவுஸ்திரேலிய மேயர் கோரிக்கையொன்றினை விடுத்துள்ளார்.

கடந்த 2013ஆம் ஆண்டில் குறித்த குடும்பத்தினர் இலங்கையில் இருந்து தற்காலிக இணைப்பு விசாவில் அவுஸ்திரேலியாவுக்கு சென்றுள்ளனர்.

இந்நிலையில், அவர்களது விசா எந்த காரணமுமின்றி நான்கே மாதங்களில் இரத்து செய்யப்பட்டுள்ளது.

அதிலிருந்து கடந்த எட்டு ஆண்டுகளாக இக்குடும்பம் அவுஸ்திரேலியாவில் நிச்சயத்தன்மையற்ற நிலையில் வாழ்ந்து வருவதாகவும் கூறியிருக்கின்றார் அவுஸ்திரேலியாவின் Ballarat நகர மேயர் Daniel Moloney.

நகர மேயர் வெளியிட்டுள்ள விடயம்

அவுஸ்திரேலியாவில் தொழிற்கட்சி தலைமையிலான அரசாங்கம் புதிதாக பொறுப்பேற்றுள்ள நிலையில் அவர்களுக்கு தீர்வை வழங்க வேண்டும் என Ballarat நகர மேயர் வலியுறுத்தியுள்ளார்.

இந்த விசா இரத்தினால், அவர்கள் சட்டரீதியாக அவுஸ்திரேலியாவில் பணியாற்றுவதற்கான அனுமதியில்லை. அவர்களால் அரசின் சுகாதார நல உதவிகள் மற்றும் இன்னும் பிற உதவிகளைப் பெற முடியாது.

இந்நிலையில், தானும் தனக்கு முன்பிருந்த மேயர்களும் முன்னாள் அவுஸ்திரேலியா பிரதமர் ஸ்காட் மாரிசன் ஆட்சியில் இருந்த போது, இக்குடும்பம் நிரந்தரமாக அவுஸ்திரேலியாவில் வசிப்பதற்கான வழியை ஏற்படுத்த வேண்டும் என கடிதம் எழுதியிருந்தோம் எனவும்  Ballarat நகர மேயர் Daniel Moloney தெரிவித்துள்ளார்.