இஸ்ரேலிய அரசாங்கம் கொண்டு வந்துள்ள புதிய மரணதண்டனை சட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து, ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரை மற்றும் கிழக்கு ஜெருசலேம் முழுவதிலும் உள்ள பலஸ்தீனர்கள் பாரிய பணிப்பகிஷ்கரிப்பு மற்றும் போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர். இப்போராட்டத்தின் காரணமாகப் பெரும்பாலான கடைகள், பல்கலைக்கழகங்கள் மற்றும் பொது நிறுவனங்கள் மூடப்பட்டதோடு, பெருமளவிலான மக்கள் வீதிகளில் இறங்கித் தங்கள் எதிர்ப்பைப் பதிவு செய்தனர்.
இஸ்ரேலிய தீவிர வலதுசாரி பாதுகாப்பு அமைச்சர் இத்தாமர் பென்கவீரின் ஆதரவுடன் கொண்டுவரப்பட்ட இந்தச் சட்டத்திற்கு எதிராக, ரமல்லாஹ் நகரில் ஆயிரக்கணக்கான மக்கள் அணிவகுத்துச் சென்றனர். சர்வதேச சமூகம் தலையிட்டு இந்தச் சட்டத்தை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என அவர்கள் ஆக்ரோஷமான கோஷங்களை எழுப்பினர். இதற்கிடையே, ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையாளர் வோல்கர் டேர்க், இந்தச் சட்டமானது ஆக்கிரமிக்கப்பட்ட பிரதேசங்களில் வசிப்பவர்களுக்கு எதிராகப் பயன்படுத்துவது ஒரு “போர்க் குற்றம்” எனச் சாடியுள்ளார்.
ரமல்லாஹ்வில் நடைபெற்ற போராட்டத்தில் பங்கேற்ற ரீமன் என்ற பெண் கூறுகையில், அங்கு திரண்டிருக்கும் ஒவ்வொருவருக்கும் தந்தை, சகோதரன் அல்லது கணவன் என யாராவது ஒருவர் இஸ்ரேலிய சிறையில் இருப்பதாகவும், கைதிகள் இல்லாத பலஸ்தீனக் குடும்பமே இல்லை என்றும் உருக்கமாகத் தெரிவித்தார். தற்போது இஸ்ரேலிய சிறைகளில் சுமார் 9,500 க்கும் மேற்பட்ட பலஸ்தீனர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ள நிலையில், அவர்கள் சித்திரவதை மற்றும் மருத்துவப் புறக்கணிப்புகளை எதிர்கொள்வதாக மனித உரிமை அமைப்புகள் கவலை வெளியிட்டுள்ளன.
கடந்த திங்கட்கிழமை இஸ்ரேலிய நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட இந்தப் புதிய சட்டத்தின் கீழ், மேற்குக் கரையில் உள்ள இஸ்ரேலியர்களை இலக்கு வைத்து தாக்குதல் நடத்துவோருக்கு இராணுவ நீதிமன்றங்கள் மூலம் மரண தண்டனை விதிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. இருப்பினும், இச்சட்டம் நீதியை நிலைநாட்டுவதற்குப் பதிலாக ஒருதலைப்பட்சமான பழிவாங்கும் நடவடிக்கையாகவே அமையும் என விமர்சகர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
ஜெருசலேம் மற்றும் ரமல்லாஹ்வின் முக்கிய பகுதிகளில் போராட்டக்காரர்கள் டயர்களை எரித்துத் தங்கள் எதிர்ப்பைக் காட்டினர். அவர்களைக் கலைக்க இஸ்ரேலிய பாதுகாப்புப் படையினர் கண்ணீர் புகைக்குண்டுகள் மற்றும் ரப்பர் குண்டுகளைப் பயன்படுத்தியதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. 1967 முதல் மேற்குக் கரையை இஸ்ரேல் ஆக்கிரமித்து வரும் நிலையில், 2023 அக்டோபர் முதல் நிலவும் போர்ச் சூழலால் அங்கு வன்முறைகள் அதிகரித்துள்ளமையும், இதுவரை ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
