அவுஸ்திரேலியாவின் சிட்னி துறைமுகத்தில் உள்ள வாக்லூஸ் (Vaucluse) பகுதியில், ஞாயிற்றுக்கிழமை மாலை தனது நண்பர்களுடன் நீந்திக்கொண்டிருந்த 12 வயது சிறுவன் ஒருவன், பெரிய வகை ‘புல் ஷார்க்’ (Bull Shark) எனும் சுறா மீனினால் கொடூரமாகத் தாக்கப்பட்டுள்ளான். கடலில் வலையிடப்பட்ட பாதுகாப்பான பகுதிக்கு வெளியே அவர்கள் விளையாடிக்கொண்டிருந்த போது, எதிர்பாராத விதமாக அந்தச் சிறுவனின் இரண்டு கால்களையும் சுறா கவ்வியுள்ளது. இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த அவனது நண்பர்கள், பின்வாங்காமல் துணிச்சலாக நீரில் குதித்து, படுகாயமடைந்த சிறுவனை ஒரு பாறைத் தளத்திற்கு இழுத்து வந்துள்ளனர்.
விபத்து குறித்து தகவல் அறிந்ததும், அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த கடலோரக் காவல் படையினர் அதிவேகப் படகு மூலம் சில நிமிடங்களிலேயே அங்கு விரைந்தனர். சிறுவன் அதிக இரத்தப் போக்கினால் நினைவிழந்த நிலையில் இருந்ததால், பொலிஸ் அதிகாரி ஜோன் மோரிஸ் உடனடியாகச் சிறுவனின் கால்களில் இரத்த ஓட்டத்தைக் கட்டுப்படுத்தும் கட்டுகளை (Tourniquets) இட்டு முதலுதவி செய்தார். பின்னர் படகிலேயே அவனுக்குச் செயற்கை சுவாசமும் (CPR) வழங்கப்பட்டது. சிட்னி குழந்தைகள் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட அந்தச் சிறுவன், தற்போது தீவிர சிகிச்சைப் பிரிவில் (ICU) உயிருக்குப் போராடி வருகிறான்.
கடந்த சில நாட்களாக சிட்னியில் பெய்த கனமழையினால் கடல் நீர் கலங்கலாக (Brackish water) இருந்ததே இந்தத் தாக்குதலுக்கு முக்கியக் காரணமாகக் கூறப்படுகிறது. கலங்கலான நீரில் சுறாக்கள் அதிக ஆக்ரோஷத்துடன் இருக்கும் என்பதால், பொதுமக்கள் இத்தகைய சூழலில் கடலில் இறங்க வேண்டாம் எனப் பொலிஸார் எச்சரித்துள்ளனர். “ஆபத்தான நிலையில் இருந்த நண்பனைத் துணிச்சலாகக் காப்பாற்றிய அந்தச் சிறுவர்களின் மனிதாபிமானம் மற்றும் நட்பு வியக்கத்தக்கது” என மீட்புப் பணியில் ஈடுபட்ட அதிகாரிகள் பாராட்டுத் தெரிவித்துள்ளனர்.