ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் உள்ள புகழ்பெற்ற போண்டி (Bondi) கடற்கரையில் கடந்த வாரம் நிகழ்த்தப்பட்ட கோரத் தாக்குதல் குறித்த திடுக்கிடும் புதிய தகவல்கள் நீதிமன்ற ஆவணங்கள் மூலம் வெளிவந்துள்ளன. இந்தத் தாக்குதலில் பயங்கரவாதிகள் ‘டென்னிஸ் பந்து குண்டுகள்’ உட்பட நான்கு வகையான வெடிபொருட்களைப் பயன்படுத்தியது தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்தத் தாக்குதலில் 15 பேரைக் கொன்றதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ள 24 வயதான நவீத் அக்ரம், காயங்களுக்குச் சிகிச்சை பெற்று வந்த நிலையில், தற்போது சிறைக்கு மாற்றப்பட்டுள்ளார். இந்தத் தாக்குதலுக்கு முன்னதாக, நவீத் அக்ரம் மற்றும் அவரது தந்தை ஆகிய இருவரும் ஐஎஸ் (Islamic State) பயங்கரவாத அமைப்பின் கொடிக்கு முன்னால் அமர்ந்து, தங்களின் தற்கொலைப்படைத் திட்டம் குறித்து வீடியோ பதிவு செய்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கடந்த சில மாதங்களாகவே மிகவும் திட்டமிட்டு துப்பாக்கிப் பயிற்சி பெற்று வந்த இவர்கள், தாக்குதல் நடத்துவதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பே போண்டி கடற்கரைப் பகுதியை உளவு பார்த்தது சிசிடிவி (CCTV) காட்சிகளில் பதிவாகியுள்ளது. இவர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட ஐந்தாவது வெடிபொருள் மற்றும் இவர்களது மதவாதத் தீவிரவாதப் பின்னணி குறித்து நியூ சவுத் வேல்ஸ் பொலிஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். திட்டமிடப்பட்ட இந்தத் தாக்குதல் ஆஸ்திரேலியா முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.