Thayagam Tamil Radio Australia

லலித் – குகன் வழக்கு: யாழ். நீதிமன்றில் சாட்சியமளிக்க என்ன அச்சுறுத்தல்? – முன்னாள் பாதுகாப்புச் செயலாளரிடம் சத்தியக் கடதாசி கோரி நீதிமன்று உத்தரவு

December 11, 2025

Spread the love

காணாமல் ஆக்கப்பட்ட ஊடகச் செயற்பாட்டாளர்களான லலித்குமார் வீரராஜ் மற்றும் குகன் முருகானந்தன் ஆகியோரின் ஆட்கொணர்வு மனு தொடர்பான விசாரணையில், முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்‌ஷவைச் சாட்சியமளிக்க அழைப்பது தொடர்பாக, நியாயமான காரணங்களுடன் சத்தியக் கடதாசியை (Affidavit) நீதிமன்றில் சமர்ப்பிக்குமாறு யாழ்ப்பாண நீதவான் நீதிமன்றம் புதன்கிழமை உத்தரவிட்டுள்ளது.

சம்பவம் மற்றும் வழக்கு விபரம்:

  • சம்பவம்: 2011ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 10ஆம் திகதி மனித உரிமைகள் தினப் போராட்டத்தை ஒழுங்கமைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த லலித்குமார் வீரராஜ் மற்றும் குகன் முருகானந்தன் ஆகியோர் அதற்கு முதல் நாள் (டிசம்பர் 9) ஆவரங்கால் பகுதியில் வைத்து காணாமல் ஆக்கப்பட்டனர்.
  • ஆட்கொணர்வு மனு: 2012ஆம் ஆண்டு இவர்களின் உறவினர்களால் கொழும்பு மேன்முறையீட்டு நீதிமன்றில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்யப்பட்டது.
  • யாழ். நீதிமன்ற உத்தரவு: மேன்முறையீட்டு நீதிமன்ற உத்தரவுக்கு அமைய, இந்த கடத்தல் சம்பவம் தொடர்பாக சாட்சியங்களை விசாரணை செய்து அறிக்கை சமர்ப்பிக்கும் பணி 2012ஆம் ஆண்டு செப்டம்பர் 19ஆம் திகதி யாழ்ப்பாண நீதவான் நீதிமன்றில் ஆரம்பிக்கப்பட்டது.
  • சாட்சியாளர் பட்டியலில் இணைவு: 2017ஆம் ஆண்டு இந்த வழக்கு விசாரணைகளின் சாட்சியாளர் பட்டியலில் அப்போதைய பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்‌ஷவின் பெயர் இணைக்கப்பட்டது.

நீதிமன்ற நடவடிக்கை:

மன்றில் தோன்றிச் சாட்சியமளிக்குமாறு கோட்டாபய ராஜபக்‌ஷவுக்கு மன்று உத்தரவிட்டபோதும், பாதுகாப்பு காரணங்களைக் காட்டி அவரால் யாழ்ப்பாணம் வர முடியாது எனத் தொடர்ச்சியாக அவரது தரப்பு சட்டத்தரணிகள் தெரிவித்து வந்தனர்.

புதன்கிழமை விசாரணை

வழக்கு விசாரணையின்போது, கோட்டாபய ராஜபக்‌ஷவின் சட்டத்தரணிகள், அவர் நிகழ்நிலை (Online) ஊடாக மன்றில் தோன்றி சாட்சியம் அளிக்க அனுமதி கோரி விண்ணப்பம் செய்தனர்.

இதனை ஆராய்ந்த யாழ்ப்பாண நீதவான் நீதிமன்றம், கோட்டாபய ராஜபக்‌ஷ யாழ்ப்பாணம் வந்து சாட்சியமளிப்பதில் உள்ள நியாயமான பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் என்ன என்பதனை விபரமாகக் குறிப்பிட்டு, அதனைச் சத்தியக் கடதாசி மூலமாக மன்றில் சமர்ப்பிக்குமாறு உத்தரவிட்டது.

அடுத்த வழக்கு விசாரணை எதிர்வரும் பெப்ரவரி மாதம் 06ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.