தமிழீழத் தேசியக்கொடிக்கான கனேடிய அங்கீகாரம் தொடர்பில் இலங்கை அரசாங்கம் தனது அச்சத்தை வெளிப்படுத்தியுள்ளதுடன், விடுதலைப் புலிகள் அமைப்பின் சின்னத்தை அங்கீகரித்தல் உட்பட, இலங்கையில் பிரிவினையைத் தூண்டக்கூடிய விதத்திலான நடவடிக்கைகளைக் கனடா தடுத்து நிறுத்த வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இலங்கைக்கான புதிய கனடாத் தூதுவராக நியமிக்கப்பட்டுள்ள இஸபெல் கத்ரின் மார்டின் உடனான சந்திப்பின் போது, இலங்கை வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் இத்தகைய கோரிக்கையை விடுத்துள்ளார்.
பிரிவினையைத் தூண்டும் நடவடிக்கைகள்
“இலங்கையில் பிரிவினையைத் தூண்டக்கூடிய நடவடிக்கைகளைக் கனேடிய அரசாங்கம் தடுக்கவேண்டும். கனடாவில் வாழும் சில குழுக்களால் முன்னெடுக்கப்பட்டுவரும் சில நடவடிக்கைகள் இலங்கையில் தேசிய ஒருமைப்பாட்டைக் கட்டியெழுப்பும் முயற்சிக்குப் பாதகத்தை ஏற்படுத்தும் விதத்தில் அமைந்துள்ளமையைச் சுட்டிக்காட்டியதாக” இலங்கை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
கனடாவின் நிலைப்பாடு
இதனிடையே, விடுதலைப் புலிகள் அல்லது பிரிவினைவாதச் சித்தாந்தங்களுடன் தொடர்புடைய அத்தகைய சின்னங்களை கனேடிய கூட்டாட்சி அரசாங்கம் அங்கீகரிக்கவில்லை எனத் தூதுவர் தெரிவித்துள்ளார்.
“இலங்கையின் இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டிற்கு கனடா தொடர்ந்து உறுதிபூண்டுள்ளது” என்று தூதுவர் தெரிவித்தார் என அமைச்சர் விஜித ஹேரத் குறிப்பிட்டுள்ளார்.