ஏறாவூர் பகுதியில் போதைப்பொருள் விற்பனை நிலையமாக செயல்பட்ட வீடு ஒன்றை பொலிஸார் நேற்று முற்றுகையிட்டு 56 வயதான பெண் ஒருவரையும் கைது செய்துள்ளனர்.
அவரிடமிருந்து 5,350 மில்லி கிராம் ‘ஜஸ்’ போதைப்பொருள் மற்றும் 3 இலட்சத்து 61 ஆயிரம் ரூபாய் பணமும் கைப்பற்றப்பட்டுள்ளது.
மாவட்ட புலனாய்வு பிரிவின் தகவலின் அடிப்படையில், ஏறாவூர் பொலிஸ் பிரிவு அதிகாரிகள், குறித்த வீட்டை முற்றுகையிட்டனர்.
நீண்டகாலமாக போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டு வந்ததாக சந்தேகிக்கப்படும் குறித்த பெண், இன்று நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார் என பொலிஸார் தெரிவித்தனர்.
இதேவேளை சுன்னாகம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புன்னாலைக்கட்டுவன் பகுதியில் இன்று அதிகாலை 33 வயதுடைய ஹெரோயின் போதைப்பொருள் வியாபாரி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இதன்போது அவரிடமிருந்து 2 ஆயிரத்து 400 மில்லிகிராம் ஹெரோயின் மீட்கப்பட்டுள்ளது.
யாழ் மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரின் கீழ் இயங்கும் பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவல் அடிப்படையில், சுன்னாகம் பொலிஸ் நிலைய பாரிய குற்றத்தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரியின் தலைமையிலான பொலிஸ் குழுவினரால் இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
கைது செய்யப்பட்ட சந்தேகநபரிடம் விசாரணைகளை மேற்கொண்ட பின்னர் அவரை நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.