“உள்நாட்டுக்குள் பேச்சுமூலம் தீர்வைக் காண்பதற்கு நாம் எப்போதும் தயாராகவே இருக்கின்றோம். அதற்குரிய எமது தரப்பு கதவு திறந்தே உள்ளது. ஆனால் அரச தரப்பில் இருந்து இன்னும் அதற்குரிய கதவு திறக்கப்படவில்லை” என இலங்கை தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் சிவஞானம் சிறிதரன் தெரிவித்துள்ளார்.
மனித உரிமைகள் தொடர்பான பிரச்சினைகள் குறித்த பிரேரணை நேற்று முன்வைக்கப்பட்டபோது உரையாற்றுகையிலேயே அவர் இதனை வலியுறுத்தினார்.
அவர் மேலும் கூறியதாவது:
- “தந்தை செல்வா காலம் முதல் தலைவர் பிரபாகரன் காலம்வரை பல தடவைகள் பேசியுள்ளோம். சம்பந்தன் காலத்திலும் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டோம்.
- உங்களோடு கைகோர்த்து உரிமையைப் பெற்றுக்கொள்ள எமது தரப்பு எப்போதும் தயாராக உள்ளது. ஆனால், அரசால் இன்னும் பேச்சுவார்த்தைக்கான கதவு திறக்கப்படவில்லை.
- ஒரு வருடம் கடந்தும் எந்த முன்னேற்றமும் இல்லை. இனி இருப்பீர்களா என்பதைக் காலம்தான் தீர்மானிக்கும்.
அதேவேளை, ஜெனிவா மாநாட்டில் முன்னாள் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர ஏற்றுக்கொண்ட கலப்பு விசாரணை முறை தற்போது நிராகரிக்கப்பட்டுள்ளது. இதனால், பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியை வழங்குவதில் பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
“எம்மீது குற்றம் புரிந்தவர்களே இன்று நீதிபதியாகவும், விசாரணையாளராகவும் இருக்கின்றனர். அப்படி இருக்கும்போது எவ்வாறு பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்கும்?” எனவும் சிறிதரன் கேள்வி எழுப்பினார்.