மட்டக்களப்பு மாவட்ட கிறிஸ்தவ ஒன்றியத்தினரால் கருப்பு ஜூலை பேரவலத்தை நினைவுகூரியும், செம்மணி புதைகுழி மற்றும் வடகிழக்கில் நடந்த மனிதகொலைகளுக்கு நீதிவேண்டியும், இவை மீண்டும் நிகழாதபடி உறுதிப்படுத்தவும் கவனயீர்ப்பு போராட்டம் இன்று மட்டக்களப்பு காந்தி பூங்காவில் நடைபெற்றது.
இந்த போராட்டத்தில் மட்டக்களப்பைச் சேர்ந்த கிறிஸ்தவ அருட்தந்தைகள், வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்களின் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் சிவில் சமூக ஆர்வலர்கள் கலந்து கொண்டு, “கருப்பு ஜூலை – இலங்கை அரசின் பயங்கரவாத கொடுமைகள்”, “செம்மணி புதைகுழிக்கு சர்வதேச விசாரணை தேவை”, “தமிழர் தாயகத்தில் மனித புதைகுழிகளுக்கு சர்வதேச நீதி வேண்டும்”, “வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நீதி வேண்டும்” எனும் வாசகங்களுடன் பதாகைகள் ஏந்தி, கோஷங்களை எழுப்பினர்.
இதில், சர்வதேச நீதிப்பொறிமுறை பிரிவின் கீழ் வடகிழக்கில் நிகழ்ந்த இனப்படுகொலைகளுக்கான விசாரணைகள் விரைந்து முன்னெடுக்கப்பட வேண்டியதெனவும் வலியுறுத்தப்பட்டது.