நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவின் உறுப்பினர் பதவியை இரத்து செய்யக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரணைக்கு எடுக்க மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று (செவ்வாய்க்கிழமை) அனுமதி வழங்கியது.
மேன்முறையீட்டு நீதிபதிகள் மாயாதுன்னே கொரயா மற்றும் மஹேன் கொபல்லவ அடங்கிய அமர்வின் போது, இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. எனினும், அச்சமயத்தில் எம்.பி அர்ச்சுனா நாடாளுமன்ற அமர்வுகளில் பங்கேற்கவும் வாக்களிக்கவும் இடைக்காலத் தடை உத்தரவு வழங்கப்படாது என்றும் நீதிமன்றம் அறிவித்தது.
இது தொடர்பான மனுவை அபிநவ நிவஹல் பெரமுனவின் தலைவர் ஓஷல ஹேரத் தாக்கல் செய்திருந்தார்.
மனுதாரர் தரப்பில் ஆஜராகிய சட்டத்தரணி அசோக் பரன், பிரதிவாதியான நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா, நாடாளுமன்றத்திற்கு தெரிவான வேளையில் அரச வைத்திய சேவையிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டவராக இருந்ததால், அரசியலமைப்பின்படி அவர் நாடாளுமன்றத்திற்குத் தகுதி பெற்றவர் அல்ல என்று வாதிட்டார். எனவே, அவருக்கு நாடாளுமன்றத்தில் அமர்ந்து வாக்களிக்கும் சட்டபூர்வ உரிமை இல்லை என கூறினார்.
இதற்கு பதிலளித்த பிரதிவாதி தரப்பின் சட்டத்தரணி சேனானி தயாரத்ன, எம்.பி அர்ச்சுனா சம்பளமின்றி இடைநீக்கம் செய்யப்பட்ட நிலையில் அரச ஊழியராகக் கருத முடியாது என்றும், எனவே அவரைத் தேர்தலுக்கு தகுதியற்றவராகக் கூற முடியாது என்றும் வாதிட்டார்.
இரு தரப்புகளின் வாதங்களையும் பரிசீலித்த மேன்முறையீட்டு நீதிமன்றம், வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொள்ள தீர்மானித்தது. இது ஓகஸ்ட் 1ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட உள்ளதாகவும் நீதிமன்றம் அறிவித்தது.