வடக்கு மாகாணத்தில் இராணுவ கட்டுப்பாட்டிலிருந்த பாதைகள் மற்றும் காணிகள் விடுவிக்கப்படும்போது, தென்பகுதியிலுள்ள சில அரசியல்வாதிகள் எதிர்மறையான நிலைப்பாடுகளை வெளிப்படுத்தி வருகின்றனர் என வடக்கு மாகாண ஆளுநர் நா. வேதநாயகன், இலங்கைக்கான நோர்வேயின் பிரதித் தூதுவர் மார்ரைன் அம்டால் பொத்தெமுக்கு கவலையுடன் தெரிவித்துள்ளார்.
இச்சந்திப்பு செவ்வாய்க்கிழமை யாழ்ப்பாணத்தில் உள்ள ஆளுநர் செயலகத்தில் நடைபெற்றது. இதன்போது, பல்வேறு சமூக, பொருளாதார மற்றும் சுற்றுச்சூழல் தொடர்பான விடயங்கள் குறித்து விரிவான கலந்துரையாடல் நடைபெற்றது.
குடிநீர் மற்றும் சுற்றுச்சூழல் சவால்கள் குறித்து விவாதம்
யாழ். மாவட்டத்தில் நிலவும் குடிநீர் பற்றாக்குறை குறித்து ஆளுநர் கவலை வெளியிட்டார். கடல் நீரை சுத்திகரித்து குடிநீர் வழங்கும் திட்டம் இருந்தாலும், அதன் செலவுகள் அதிகமாக இருப்பதால், மாற்றுத் தீர்வுகள் தேடப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
அத்துடன், சுற்றுலாத்துறையில் வளர்ச்சி எட்டப்பட்டாலும், கழிவுநீர் சுத்திகரிப்பு வசதிகள் இல்லாததால் சவால்கள் நிலவுகின்றன என்றும், இந்த துறைக்கு உட்கட்டமைப்பு மேம்பாடு அவசியமாக இருக்கின்றது என்றும் ஆளுநர் கூறினார்.
உற்பத்தி மாற்று செய்முறைகள் பற்றிய வலியுறுத்தல்
விவசாயம் மற்றும் மீன்பிடி ஆகிய துறைகளில் கிடைக்கும் உற்பத்திப் பொருட்கள் தற்போது அப்படியே ஏற்றுமதி செய்யப்படுகின்றன. அவற்றை முடிவுப்பொருட்களாக (value-added products) மாற்றி ஏற்றுமதி செய்யும் திட்டங்கள் உருவாக்கப்பட வேண்டும் எனவும், இதுவே உள்நாட்டு பொருளாதார வளர்ச்சிக்குத் துணைபுரியும் முக்கிய வழியாக அமையும் எனவும் ஆளுநர் வலியுறுத்தினார்.
இந்தச் சந்திப்பு, உட்கட்டமைப்பு மேம்பாடு, மக்கள் வாழ்வாதார மேம்பாடு மற்றும் சமூகநீதி ஆகியன தொடர்பான முக்கியக் கோட்பாடுகளை வெளிப்படுத்தியதாகும். வடக்கு மாகாணத்தின் நிலமை குறித்து சர்வதேச தேசங்களின் ஆதரவும் கவனமும் அதிகரிக்க வேண்டிய தேவை இச்சந்திப்பின் மூலம் மேலும் வலியுறுத்தப்பட்டுள்ளது.