ஆஸ்திரேலிய தேர்தல் பிரச்சாரம் இறுதிக்கட்டத்தை நோக்கி நகரும் வேளையில், பிரதமர் ஆண்டனி அல்பனீசி மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் பீட்டர் டட்டன் முக்கியமான தொகுதிகளை கைப்பற்றும் நோக்கில் பல்வேறு மாநிலங்களில் தீவிர பிரச்சாரத்தை நடத்தி வருகின்றனர்.
இன்று பிரதமர் ஆண்டனி அல்பனீசி, குயின்ஸ்லாந்து மாநிலத்தில் பரப்புரை மேற்கொண்டு வருகிறார். ப்ரிஸ்பேன் மற்றும் கிரிஃபித் உள்ளிட்ட கிரீன்ஸ் கட்சி கட்டுபாட்டில் உள்ள தொகுதிகளை வெல்வதை இலக்காகக் கொண்டு அவர் பிரச்சாரம் நடத்தி வருகிறார்.
மேலும், குயின்ஸ்லாந்தின் தொலைதூர வடபகுதியில் அமைந்துள்ள, நீண்ட காலமாக லிபரல் கட்சியின் கட்டுப்பாட்டில் உள்ள லீச் கார்ட் தொகுதியையும் ஆண்டனி அல்பனீசி குறிவைத்துள்ளார்.
அந்த அடிப்படையில் ஆஸ்திரேலிய பிரதமர் ஆண்டனி அல்பனீசி, பிரிஸ்பேன் நகரில் உள்ள பானர் (Bonner) தொகுதியில் வாக்காளர்களை இன்று சந்தித்துள்ளார்.
பானர் தொகுதி தற்போது லிபரல்-நேஷனல் கட்சியின் பிடிப்பில் உள்ளது. ஆனால் வெறும் 3.4% வாக்குப் பலத்தால் மட்டுமே தக்கவைக்கப்பட்டுள்ளது. இது குவீன்ஸ்லாந்தில் மிகவும் மாறக்கூடிய (marginal) தொகுதிகளில் மூன்றாவது இடத்தில் உள்ளது.
அல்பனீசின் இந்த இரண்டாவது விஜயம், லேபர் கட்சி இந்த தொகுதியை தக்கவைக்க அல்லது வெற்றிபெற இயலும் என்று நம்புவதை தெளிவுபடுத்துகிறது.
இதேவேளை, எதிர்க்கட்சித் தலைவர் பீட்டர் டட்டன், நேற்று லேபர் கட்சியின் பென்னலாங் தொகுதியில் பிரச்சாரம் செய்ததனைத் தொடர்ந்து, இன்று சிட்னியில் தனது பிரச்சாரத்தை தொடங்கினார்.
அதேவேளை எதிர்க்கட்சி தலைவர் பீட்டர் டட்டன் தன்னுடைய முக்கிய ஆற்றல் கொள்கையான அணுசக்தி திட்டத்தைத் திறம்பட விளக்குவதை தவிர்த்து வருகிறார். இதனால் அரசியல் வட்டாரங்களில் பல்வேறு விமர்சனங்கள் எழுந்துள்ளன.
முதல்நாள் பிரச்சாரம் தொடங்கியபோதே அணுசக்திக்கு எதிரான போராட்டக்காரர்கள், டட்டனை பலமுறை இடையூறு செய்துள்ளனர். அதன் பின்னர் டட்டன், தனது அணுசக்தி கொள்கை குறித்து தானாக முன்வந்து பேசுவதைத் தவிர்த்து, பதிலாக வாழ்க்கைச் செலவின் உயர்வை முதன்மை பிரச்சார விஷயமாக மாற்றியுள்ளார்.
பிரச்சாரப் பேருந்து வேகமாக நகரும் நிலையில், எதிர்க்கட்சித் தலைவர் விரைவில் பிற இடங்களுக்கு பயணிக்கவுள்ளார் என எதிர்பார்க்கப்படுகிறது.