அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், காசா பகுதியில் 60 நாள் போர் நிறுத்தத்திற்கு தேவையான நிபந்தனைகளுக்கு இஸ்ரேல் ஒப்புக்கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளார். ட்ரூத் சோஷியல் சமூக வலைத்தளத்தில் அவர் இதனைத் தெரிவித்தார்.
“எல்லா தரப்புகளுடனும் இணைந்து இந்த போரை முடிவுக்கு கொண்டு வர செயற்படுவோம். ஹமாஸ் இந்த ஒப்பந்தத்தை ஏற்குமென நம்புகிறேன். இல்லையெனில் அவர்களின் நிலை மேலும் மோசமாகும்,” எனவும் டிரம்ப் கூறியுள்ளார்.
இந்தச் செய்தி, அடுத்த வாரம் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவுடன் நடைபெறவுள்ள டிரம்பின் சந்திப்பை முன்னிட்டு வெளியாகியுள்ளது. நெதன்யாகுவும் இந்த போரின் முடிவை விரும்புவதாகவும் டிரம்ப் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில், ஹமாஸ் தரப்பினர் உடனடியாக எந்த பதிலும் அளிக்கவில்லை. ஆனால், ஹமாஸ் நிரந்தரமான போர் நிறுத்தம் மற்றும் காசாவிலிருந்து இஸ்ரேலின் முழுமையான வெளியேற்றத்தையே எதிர்பார்த்துவருகிறது.
மேலும், சுமார் 50 இஸ்ரேலி பணயக்கைதிகள் காசாவில் உள்ளதாகவும், அவர்களில் குறைந்தது 20 பேர் உயிருடன் இருக்கலாம் என நம்பப்படுகிறது.
