தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இந்தியா தனது முதல் உலகக் கிண்ணத்தை வெல்ல முக்கியப் பங்காற்றிய ஆரம்பத் துடுப்பாட்ட வீராங்கனை ஷபாலி வர்மா, கடந்த ஒரு வருடமாகத் தான் எதிர்கொண்ட சவால்களையும், அதனைத் தாண்டி வெற்றி கண்ட இரகசியத்தையும் வெளிப்படுத்தினார்.
ஹரியானாவின் ரோட்டக்கில் நடைபெற்ற பாராட்டு நிகழ்வில் செய்தியாளர்களிடம் பேசிய 21 வயதான ஷபாலி, “கடந்த ஒரு வருடம் எனக்குக் கடுமையானதாக இருந்தது. நான் பல சிரமங்களை எதிர்கொண்டேன். ஆனால், நான் தொடர்ந்து கடினமாக உழைத்தேன், எனது முயற்சிக்கு இறைவன் எனக்குப் பலன் அளித்தார்,” என்று தெரிவித்தார்.
காயம் காரணமாக அணிக்கு மாற்றாக அழைக்கப்பட்ட ஷபாலி, இறுதிப் போட்டியில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக 87 ஓட்டங்கள் பெற்று, பந்துவீச்சில் 2 விக்கெட்டுகளை வீழ்த்தி, இந்தியா 52 ஓட்டங்களால் வெற்றிபெற உதவினார். இதனால், அவர் ‘இறுதிப் போட்டியின் வீராங்கனை’ விருதையும் தட்டிச் சென்றார்.
“நான் அரையிறுதிக்கு முன்னால் அணியில் இணைந்தபோது, உலகக் கிண்ண வெற்றிக்கு என்னால் முடிந்த பங்களிப்பை வழங்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தேன். இறுதிப் போட்டி ஒரு பெரிய மேடை. முதலில் சற்றுக் குழப்பமாக இருந்தேன். ஆனால், அமைதியாகி எனது வியூகத்தில் கவனம் செலுத்தி, அதைச் சரியாகச் செய்தேன். அதுவே எனது சகலதுறை ஆட்டத்திற்கு உதவியது,” என்று அவர் மேலும் கூறினார்.
வெற்றிக்காகச் சதம் அடிக்காதது குறித்துத் தனக்குக் கவலை இல்லை என்று குறிப்பிட்ட ஷபாலி, உலகக் கிண்ணத்தை வென்றதுதான் மிகவும் முக்கியம் என்றார். அத்துடன், நிகழ்வில் பங்கேற்றிருந்த இளம் பெண்களுக்கு அவர் அறிவுரை வழங்குகையில், “நீங்கள் எதைத் தேர்ந்தெடுத்தாலும், எப்போதும் கடினமாக உழைத்து, தன்னம்பிக்கையுடன் இருங்கள், முடிவுகள் நிச்சயம் பின்வரும்,” என்று உற்சாகமூட்டினார்.
இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி, ஆரம்பத்தில் அடைந்த தொடர்ச்சியான தோல்விகளைத் தாண்டி, நாக்-அவுட் சுற்றில் மீண்டு வந்து, வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது குறிப்பிடத்தக்கது