ஆஸ்திரேலிய மத்திய அரசாங்கம் கொண்டு வந்துள்ள புதிய சட்டம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சட்டத்தின்படி, 16 வயதுக்குட்பட்ட இளைஞர்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இளையவர்களைப் பாதுகாக்கும் நோக்கில் கொண்டு வரப்பட்ட இந்தத் தடை, புதன்கிழமை முதல் அமுலுக்கு வரவுள்ளது.
மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு எதிராக, ‘டிஜிட்டல் ஃப்ரீடம் ப்ராஜெக்ட்’ என்ற அமைப்பு உயர் நீதிமன்றத்தில் சவால் விடுத்துள்ளது. 15 வயதுடைய இரண்டு இளைஞர்களும் இந்த வழக்கில் வாதிகளாகச் சேர்ந்து, இச்சட்டம் தங்கள் கருத்துச் சுதந்திரத்தைப் பறிப்பதாக வாதிடுகின்றனர்.
இந்தச் சூழலில், நியூ சவுத் வேல்ஸ், மேற்கு ஆஸ்திரேலியா மற்றும் தெற்கு ஆஸ்திரேலியா ஆகிய மூன்று முக்கிய மாநிலங்கள், மத்திய அரசாங்கத்தின் தடையை ஆதரித்து உயர் நீதிமன்றத்தில் தலையிட விண்ணப்பித்துள்ளன.
இந்தத் தடை இளையவர்களைப் பாதுகாப்பதற்கு மிகச் சரியான முடிவு என்று மாநில முதல்வர்கள் உறுதியாக நம்புகிறார்கள். நியூ சவுத் வேல்ஸ் முதல்வர், சமூக ஊடகங்களை “குழந்தைகளிடம் செய்யப்படும் ஒரு பெரிய, கட்டுப்பாடற்ற சோதனை” என்று குறிப்பிட்டு, இந்தத் தடையை வரவேற்றுள்ளார்.