யாழ்ப்பாணம் – வடகிழக்கு மாகாணங்களில் மாகாண சபைத் தேர்தலை நடத்தவும், முழுமையான அதிகாரப் பகிர்வை நடைமுறைப்படுத்தவும் வலியுறுத்தி, தமிழ்த்தேசிய அரசியல் கட்சிகளுக்கிடையேயான முக்கியமான கலந்துரையாடல் புதன்கிழமை மாலை யாழ்ப்பாணம் டில்கோ ஹோட்டலில் நடைபெற்றது.
இந்தக் கலந்துரையாடலை முன்னாள் இணைந்த வடக்கு – கிழக்கு மாகாண அரசின் முதலமைச்சர் வரதராஜப்பெருமாள் ஏற்பாடு செய்திருந்தார். தமிழ்தேசிய அரசியலின் தற்போதைய நிலை, மாகாண சபைத் தேர்தல் கோரிக்கை, மற்றும் தமிழருக்கான தன்னாட்சிப் போராட்டம் போன்ற முக்கிய விடயங்கள் குறித்து ஆரோக்கியமான விவாதங்கள் இதில் இடம்பெற்றன.
இந்தக் கூட்டம், ஜனநாயகத் தமிழ்தேசியக் கூட்டணியின் (TNA) தற்போதைய பிரச்சார இயக்கத்தை மேலும் வலுப்படுத்துவதற்காகவும், அதனை பல்வேறு தமிழர் கட்சிகளும் பொது அமைப்புகளும் இணைந்து முன்னெடுக்க வழிவகை செய்யவும் ஏற்பாடாக இருந்தது.
வரதராஜப்பெருமாள் உரையாற்றியபோது,
“முழுமையான அதிகாரப் பகிர்வு என்பது தமிழரின் நீண்டகால அரசியல் கோரிக்கை. இந்தக் கோரிக்கையை வலியுறுத்தி அனைத்து தமிழ்த்தேசியக் கட்சிகளும் ஒருமனதாகச் செயல்படுவது அவசியம்,”
என்று அவர் வலியுறுத்தினார். மேலும், இந்த இயக்கத்தை ஒருங்கிணைக்கும் நோக்கில் தன் தரப்பிலிருந்து ஆலோசனைகளையும் வழங்கியதாக தெரிவித்தார்.
தமிழரசுக்கட்சியின் பொதுச் செயலாளர் எம்.ஏ. சுமந்திரன் கலந்து கொள்வதாக இருந்தபோதும், தவிர்க்க முடியாத காரணத்தால் அவர் பங்கேற்கவில்லை. எனினும், திட்டமிட்டபடி கலந்துரையாடல் முன்னெடுக்கப்பட்டது.
கூட்டத்தில் ஜனநாயகத் தமிழ்தேசியக் கூட்டணியின் தலைவர்களான சுரேஷ் பிரேமச்சந்திரன், சித்தார்த்தன், செல்வம் அடைக்கலநாதன், சந்திரகுமார், வேந்தன், மேலும் முன்னாள் வட மாகாணசபை கல்வி அமைச்சர் சர்வேஸ்வரன், மாகாணசபை உறுப்பினர் கஜதீபன், மாநகரசபை உறுப்பினர் ஈசன், இணைந்த வடக்கு–கிழக்கு மாகாணசபை உறுப்பினர் கமலாகரன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
கலந்துரையாடல் முடிவில் பத்திரிகையாளர்களுடனான சந்திப்பும் இடம்பெற்றது. இதில் பங்கேற்ற தலைவர்கள் அனைவரும், மாகாண சபைத் தேர்தலை உடனடியாக நடத்தி அதிகாரப் பகிர்வை நடைமுறைப்படுத்துவது நாட்டின் ஜனநாயகத்திற்கும் தமிழரின் அரசியல் உரிமைகளுக்கும் இன்றியமையாதது என வலியுறுத்தினர்.