தமிழகத்தில் செயல்படும் தனியார் பள்ளிகளில் நடைபெற்று வரும் கல்வி கட்டண முறைகேடுகள் தொடர்பாக பா.ம.க. நிறுவனர் டாக்டர் எஸ். ராமதாஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஏழை எளிய மாணவர்களும் தரமான கல்வி பெற வேண்டும் என்ற நல்ல எண்ணத்தில், தமிழக அரசு கடந்த காலங்களில் 25% இடங்களை அரசு நிதி உதவியுடன் தனியார் பள்ளிகளில் வழங்கும் உத்தரவு பிறப்பித்திருந்தது. இதன் நடைமுறைகளை கண்காணிக்க 2013-ல் உள்ளாட்சி உறுப்பினர்கள் தலைமையில் குழுக்கள் அமைக்கப்பட்டன. ஆனால் தற்போது அந்தக் குழுக்களின் நிலை என்னவாயிற்று என்ற கேள்வி எழுகின்றது,” என அவர் கேட்டுள்ளார்.
மேலும், சிபிஎஸ்இ மற்றும் மெட்ரிகுலேஷன் பள்ளிகள் சேர்க்கை கட்டணமாக ₹10,000 முதல் ₹25,000 வரை, மேலும் “சிறப்பு வகுப்புகள்” என்ற பெயரில் ₹25,000 முதல் ₹35,000 வரை வசூலித்து வருவதை அவர் கடுமையாக விமர்சித்தார்.
“மாணவர்கள் காலை, மாலை நேரங்களில் கூடுதலாக 2 மணி நேரம் வகுப்பில் உட்கார வைக்கப்படுகின்றனர். பள்ளிக்கூட நேரத்திலேயே பாடங்கள் கற்றுக்கொடுக்க முடியாத நிலையில், கூடுதல் நேரத்தில் என்ன கற்பிக்கப்படுகின்றது?” என அவர் கேள்வி எழுப்பினார்.
இத்தகைய செயல்கள் கட்டண முறைகேடுகளை புதுமையான பெயர்களில் நியாயப்படுத்தும் முயற்சியாகவே பார்க்கப்பட வேண்டும் என ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
இவ்வனைத்தையும் கருத்தில் கொண்டு, தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுத்து, மாணவர்களும் பெற்றோர்களும் நேரிடும் நிதி சுமையை குறைக்க வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.