வடக்கு மற்றும் கிழக்கில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளால் இயங்கும் அமைப்பான “வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் சங்கத்திற்கு” புதிய நிர்வாகம் தெரிவு செய்யப்பட்டுள்ளது.
நேற்றைய தினம் (ஞாயிற்றுக்கிழமை) யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் விடுதியில் நடைபெற்ற கலந்துரையாடலின்போது இந்த நிர்வாகத் தேர்வு நடைபெற்றது.
புதிய நிர்வாகத் தேர்வில்,
- தலைவராக யோகராசா கனகரஞ்சினி,
- செயலாளராக சிவானந்தன் ஜெனிற்றா,
- உப தலைவராக வல்லிபுரம் அமலநாயகி,
- உப செயலாளராக செபஸ்டியாம் தேவி,
- பொருளாளராக கதிர்காமநாதன் கோகிலவாணி ஆகியோர் ஒருமனதாக தெரிவுசெய்யப்பட்டுள்ளனர்.
பின்னர் ஊடகங்களிடம் கருத்து தெரிவித்த பிரதிநிதிகள்,
“நாங்கள் 2017ம் ஆண்டு இந்த அமைப்பை தொடங்கி, தற்போது எட்டு மாவட்டங்களைச் சேர்ந்த உறவுகளின் ஆதரவுடன் தொடர்ந்து செயற்பட்டு வருகிறோம். கடந்த இரண்டு வருடங்களாக சிலர் தனிப்பட்ட முரண்பாடுகளால் அமைப்பிலிருந்து விலகி, அமைப்பின் பெயர் மற்றும் அடையாளங்களை தனிப்பட்ட முறையில் பயன்படுத்த முயற்சிக்கின்றனர். ஆனால் அமைப்பின் பெயர், சின்னம், கடிதத் தலைப்புகள் ஆகியவை யாரும் தனிநபராக உரிமை கோர முடியாதவை” என்றனர்.