Thayagam Tamil Radio Australia

டெல் அவிவ் விமான நிலையம் மீது ஏவுகணை தாக்குதல்: ஏர் இந்தியா விமானம் அபுதாபிக்கு திருப்பம்

May 4, 2025

Spread the love

இந்தியாவின் தலைநகர் டெல்லியில் இருந்து இஸ்ரேலின் டெல் அவிவ் நகரை நோக்கி புறப்பட்ட ஏர் இந்தியா விமானம், சிக்கலான சூழ்நிலையில் ஐக்கிய அரபு அமீரகத்தின் அபுதாபிக்கு பாதுகாப்பாக திருப்பி விடப்பட்டது.

விமானம், ஜோர்டான் வான் பரப்பில் இருந்து இஸ்ரேல் வான் பரப்பிற்குள் நுழைவதற்குத் தயாராக இருந்தபோது, டெல் அவிவ் விமான நிலையத்தை குறிவைத்து ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதலை, ஏமனில் செயல்பட்டு வரும் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் மேற்கொண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

விமான நிலையம் அருகே ஏற்பட்ட இந்த பதற்றம் காரணமாக, ஏர் இந்தியா விமானம் உடனடியாக அபுதாபிக்கு divert செய்யப்பட்டது. அங்கு அது பத்திரமாக தரையிறங்கியது என்று ஏர் இந்தியா தகவல் தெரிவித்துள்ளது.

இந்தச் சம்பவத்தின் பின்னணியில், டெல்லி – டெல் அவிவ் இடையேயான விமான சேவைகள் தற்காலிகமாக ரத்து செய்யப்படுவதாகவும், பயணிகளின் பாதுகாப்பே முக்கிய முன்னுரிமையாகக் கருதப்படுவதாகவும் ஏர் இந்தியா தெரிவித்துள்ளது.

பாதுகாப்பு முன்னெச்சரிக்கையாக நடவடிக்கை

தெற்கு இஸ்ரேலில் தொடர்ந்துவரும் ஹவுதி கிளர்ச்சியாளர்களின் ஏவுகணை மற்றும் டிரோன் தாக்குதல்கள், விமான போக்குவரத்தில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளன. இஸ்ரேலின் பாதுகாப்பு அமைப்புகள் மற்றும் விமான நிலையங்கள் உயர் பாதுகாப்பு நிலைக்கு மாற்றப்பட்டுள்ளன.

சிறப்புக் கவனிப்பு

இஸ்ரேலுக்குத் திட்டமிட்டு பயணிக்க விரும்பும் இந்தியப் பயணிகள், தற்போதைய சூழ்நிலையை உணர்ந்து, ஏர் இந்தியா மற்றும் இந்திய வெளியுறவுத்துறை அறிவிப்புகளை பின்பற்ற வேண்டிய அவசியம் உள்ளது.