Thayagam Tamil Radio Australia

ஆஸ்திரேலியாவில் மைக்ரோபிளாஸ்டிக் மாசுபாடு அதிகரிப்பு – ஆய்வு எச்சரிக்கை

August 25, 2025

Spread the love

ஆஸ்திரேலியாவில் மைக்ரோபிளாஸ்டிக் மாசுபாடு தீவிரமடைந்து வருவதாக UNSW SMaRT மையம் வெளியிட்ட சமீபத்திய ஆய்வு எச்சரிக்கிறது.

இந்த ஆய்வில், வண்டல் படிவுகள், உட்புற காற்று, சாலை தூசி, நன்னீர், கடல் நீர் மற்றும் பல்வேறு உயிரினங்களில் மைக்ரோபிளாஸ்டிக் அளவுகள் குறித்து விரிவான மதிப்பாய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

தோராயமாக ஆண்டுதோறும் மூன்று மில்லியன் டன் மைக்ரோபிளாஸ்டிக் பூமியின் சூழலுக்குள் நுழைகிறது. அவை முற்றிலும் சிதைவதற்கு 50 முதல் 600 ஆண்டுகள் வரை ஆகும் என ஆய்வு தெரிவிக்கிறது.

ஆஸ்திரேலிய அரசாங்கம் எதிர்காலத்தில் இத்தகவலை கருத்தில் கொண்டு சிறப்பு சட்ட நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமென பரிந்துரைக்கப்பட்டுள்ளது. அதில்,

  • மைக்ரோபீட்களைத் தடைசெய்தல்
  • மென்மையான பிளாஸ்டிக் பயன்பாட்டை நிறுத்துதல்
  • உற்பத்தி முறையை மறுவடிவமைத்தல்
  • பசுமை சலவை (Green washing) தொடர்பான சட்டங்களை வலுப்படுத்துதல் ஆகியவை அடங்கும்.

ஆய்வாளர்கள் மேலும் சுட்டிக்காட்டியதாவது,

  • மருந்துகள், தனிப்பட்ட பராமரிப்பு பொருட்கள், ஜவுளி உற்பத்தி போன்ற துறைகளில் முதன்மை மைக்ரோபிளாஸ்டிக் செயற்கையாக உருவாக்கப்படுகிறது.
  • பைகள், பாட்டில்கள், பேக்கேஜிங் போன்ற பிளாஸ்டிக் குப்பைகள் சிதைவதால் இரண்டாம் நிலை மைக்ரோபிளாஸ்டிக் உருவாகி, சுற்றுச்சூழலில் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்துகின்றன.
  • பிளாஸ்டிக் மறுசுழற்சி தொழிற்சாலைகளும் மாசுபாட்டின் முக்கிய மூலமாக இருந்து, ஆண்டுக்கு 14 கிலோ முதல் 5800 கிலோ வரை நுண் பிளாஸ்டிக்குகளை சுற்றுச்சூழலுக்குள் வெளியிடுகின்றன.