சம்பூர் கடற்கரையை அண்மித்த பகுதியில், மிதிவெடி அகழ்வுப் பணிகளின் போது மனித எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டதால், அகழ்வுப் பணிகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளன.
சம்பூர் சிறுவர் பூங்காவுக்கு அருகிலுள்ள கடற்கரையில், கடந்த ஒரு வாரமாக மிதிவெடி அகழும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்தச் செயல்பாடுகளின் போது, நேற்று சிதைந்த மனித எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டன.
இந்த கண்டுபிடிப்பை அடுத்து, அகழ்வுப் பணி உடனடியாக நிறுத்தப்பட்டது. சம்பவம் தொடர்பான தகவல்கள் பொலிஸாரால் மூதூர் நீதிமன்றத்திற்கு அறிவிக்கப்பட்டன.
தொடர்ந்து, மூதூர் பதில் நீதவான் எம்.எம். நஸ்லீம் சம்பவ இடத்தை நேரில் பார்வையிட்டு, அகழ்வுப் பணிகளை ஜூலை 23ஆம் தேதி வரை நிறுத்த உத்தரவிட்டார்.
மேலும், இப்பகுதியை அரச பகுப்பாய்வு திணைக்களம், சட்ட வைத்திய அதிகாரி, தொல்பொருள் திணைக்களம், புவிச்சரிதவியல் மற்றும் சுரங்கங்கள் அகழ்வுப் பணியகம் ஆகியவற்றின் இணைந்த கண்காணிப்பில், புதன்கிழமை முதல் மீண்டும் அகழ்வுப் பணிகள் முன்னெடுக்கப்பட உள்ளன.
பாதுகாப்பு பணிக்காக சம்பவ இடத்தில் பொலிஸாரை அமர்த்துவதற்கும் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
கண்டுபிடிக்கப்பட்ட எச்சங்கள் சம்பூர் படுகொலையை நினைவுகூறும் தூபிக்கு 40 மீட்டர் தொலைவில் இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது, இது அந்த பகுதியின் வரலாற்றுப் பின்னணியை மேலும் தீவிரமாக்குகிறது.
