காசா பகுதியில் புதிய போர் நிறுத்தம் மற்றும் பணயக்கைதிகளின் விடுவிப்பு தொடர்பாக அமெரிக்கா முன்வைத்துள்ள சமீபத்திய திட்டத்தை தாம் நிராகரிப்பதாக ஹமாஸ் அமைப்பின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளதாக பிபிசி செய்தி வெளியிட்டுள்ளது.
இந்த திட்டம், மத்திய கிழக்கு நாடுகளுக்கான அமெரிக்க விசேட தூதுவரான ஸ்டீவ் விட்கோப்பின் வழிகாட்டலின் கீழ் உருவாக்கப்பட்டதாகும். இதில், இஸ்ரேல் ஏற்கனவே கையெழுத்திட்டுள்ளதாகவும், தற்போது ஹமாஸிடமிருந்து வரும் பதிலுக்காக காத்திருக்கின்றது என வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது.
திட்டத்தின் படி, 60 நாட்கள் போர் நிறுத்தம் அமலாக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனடிப்படையில், ஹமாஸ் அமைப்பு உயிருடன் உள்ள 10 பணயக்கைதிகளை இரண்டு கட்டங்களாக விடுவிக்க வேண்டும் என்றும், இறந்த பணயக்கைதிகளின் 18 உடல்களையும் ஒப்படைக்க வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்குப் பதிலாக, இஸ்ரேலிய சிறைகளில் உள்ள பலஸ்தீன கைதிகள் விடுவிக்கப்படுவார்கள்.
ஆனால், இந்த திட்டம் போருக்கு ஒரு நிரந்தர முடிவை ஏற்படுத்தும் வகையில் இல்லை என்பதையும், முக்கிய கோரிக்கைகள் இதில் பூர்த்தி செய்யப்படவில்லை என்பதையும் காரணமாக காட்டி, ஹமாஸ் அமைப்பின் மூத்த அதிகாரி ஒருவர் திட்டத்தை நிராகரித்துள்ளதாக பிபிசி தனது செய்தியில் தெரிவித்துள்ளது.