மாமல்லபுரம்: தமிழக அரசியல் கட்சிகள் சார்பில் கிறிஸ்துமஸ் பண்டிகை தனித்தனியாகக் கொண்டாடப்பட்டு வரும் நிலையில், தமிழக வெற்றிக் கழகம் (த.வெ.க) சார்பில் இன்று பிரம்மாண்டமான முறையில் கிறிஸ்துமஸ் விழா நடைபெறுகிறது. செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் உள்ள ‘போர் பாயிண்ட்ஸ் பை ஷெரட்டன்’ (Four Points by Sheraton) நட்சத்திர விடுதியில் இன்று (திங்கட்கிழமை) காலை 10 மணியளவில் இந்த விழா தொடங்குகிறது.
இந்த விழாவில் த.வெ.க தலைவர் விஜய் நேரில் கலந்துகொண்டு சிறப்பிக்கிறார். விழாவின் முக்கிய நிகழ்வாக, கட்சியின் முக்கிய நிர்வாகிகள் முன்னிலையில் அவர் உரையாற்றுகிறார். மேலும், ஏழை எளிய மக்களுக்கான பல்வேறு நலத்திட்ட உதவிகளையும் அவர் வழங்கி மகிழ்கிறார். கட்சித் தலைவராக விஜய் பங்கேற்கும் இந்த ஆன்மீக மற்றும் சமூக நல்லிணக்க விழா தொண்டர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பாதுகாப்பு மற்றும் இடவசதி காரணங்களுக்காக, இந்த விழாவில் பங்கேற்க மொத்தம் 1,000 பேருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இது குறித்து த.வெ.க பொதுச் செயலாளர் என்.ஆனந்த் வெளியிட்ட அறிவிப்பில், “முறையான கியூ.ஆர். (QR) குறியீடு அச்சிடப்பட்ட அனுமதிச் சீட்டு வைத்திருப்பவர்கள் மட்டுமே விழா அரங்கிற்குள் அனுமதிக்கப்படுவார்கள்” என்று தெளிவுபடுத்தியுள்ளார். இதனால் விழா நடைபெறும் ஹோட்டல் வளாகத்தில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.