ஏப்ரல் 21 உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் இலங்கையில் அதிகாரிகளால் விசாரிக்கப்பட்டு வந்த ஒருவர், தற்போது பிரித்தானியாவில் அடைக்கலம் கோரியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. தாம் மீண்டும் நாட்டுக்குத் திரும்பினால் தாமும் தமது குடும்பமும் பல்வேறு பிரச்சினைகளைச் சந்திக்க நேரிடும் என்று தெரிவித்தே அவர் தஞ்சம் கோரியுள்ளார்.
இவர் 2022 ஜனவரியில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட பின்னர் விடுவிக்கப்பட்டு, சில மாதங்களுக்குப் பிறகு தமது மனைவியுடன் இலங்கையிலிருந்து பிரித்தானியாவுக்குச் சென்றுள்ளார். அவர்கள் பிரித்தானியாவுக்குச் சென்று இரண்டு வாரங்களுக்குப் பின்னர், இலங்கை அதிகாரிகள் அவரைக் கைது செய்ய பிடியாணை பிறப்பித்ததாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், 2024 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் அவரது புகலிடக் கோரிக்கையைப் பிரித்தானியா நிராகரித்தது. இந்த முடிவுக்கு எதிராக அவர் தாக்கல் செய்த மேன்முறையீடும், இந்த ஆண்டு மார்ச் மாதம் குடியேற்ற தீர்ப்பாய நீதிபதியால் நிராகரிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.