யாழ்ப்பாணம் செம்மணிப் பகுதியில் அமைந்துள்ள அணையா விளக்கு நினைவுத் தூபி சேதப்படுத்தப்பட்ட நடவடிக்கை குறித்து, கடற்றொழில் மற்றும் நீரியல் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் கடும் கண்டனம் வெளியிட்டுள்ளார்.
பாதிக்கப்பட்ட மக்களின் உணர்வுகளையும், வரலாற்று நினைவுகளையும் பிரதிபலிக்கும் மிக முக்கியமான அடையாளமாக இத்தூபி விளங்குவதாக அவர் சுட்டிக்காட்டினார். இந்தத் தூபியைக் குறிவைத்து மேற்கொள்ளப்பட்ட சேதம், சமூக ஒற்றுமைக்கும் ஜனநாயக விழுமியங்களுக்கும் எதிரானது என்று அவர் வலியுறுத்தினார்.
இக்குற்றச் செயலில் ஈடுபட்டவர்களை விரைவில் அடையாளம் கண்டு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்குத் தான் ஆலோசனை வழங்கியுள்ளதாக அமைச்சர் சந்திரசேகர் தெரிவித்தார்.
யாழ்ப்பாணத்தில் தற்போது நிலவும் அமைதி மற்றும் சமூக ஒற்றுமையை எந்த ஒரு எதிர்மறை சக்தியும் பாதிக்க அரசு ஒருபோதும் அனுமதிக்காது என்றும் அவர் உறுதியளித்தார்.
மக்களின் உணர்வுகளைப் புண்படுத்தும் இத்தகைய நடவடிக்கைகளைத் தடுக்க சமூக ஒத்துழைப்பும் அவசியம் என்று அமைச்சர் கேட்டுக்கொண்டார்.