சிட்னியின் போண்டாய் கடற்கரையில் ஹனுக்கா கொண்டாட்டத்தின் போது இடம்பெற்ற பயங்கரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து, பாதுகாப்பு நெறிமுறைகளில் பாரிய மாற்றங்களை மேற்கொள்ள நியூ சவுத் வேல்ஸ் அரசு தீர்மானித்துள்ளது.
தாக்குதலுக்கு முன்னர் விடுக்கப்பட்ட மேலதிக பாதுகாப்பு கோரிக்கைகள் கவனத்தில் கொள்ளப்படவில்லை என்பதையும், அன்றைய தின பாதுகாப்பு போதுமானதாக இல்லை என்பதையும் முதல்வர் கிறிஸ் மின்ஸ் உறுதிப்படுத்தியுள்ளார்.
எதிர்காலத்தில் இத்தகைய இடர்களைத் தவிர்க்க, அரசாங்கத்தின் அங்கீகாரத்துடன் சமூகப் பாதுகாப்புக் குழுக்களுக்கு (CSG) துப்பாக்கிகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் அறிவித்துள்ளார்.
இதற்கிடையில், இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து குரோனுல்லா கடற்கரையில் இன வன்முறையைத் தூண்ட முயன்ற இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மாநிலம் முழுவதும் பலத்த பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ள நிலையில், பாதுகாப்பு குறைபாடுகள் குறித்து விசேட விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
அவுஸ்ரேலியா செய்திகள்
பிலிப்பைன்ஸை தளமாகக் கொண்டு இயங்கிய பாரிய சிறுவர் பாலியல் துஷ்பிரயோக வலையமைப்பை ஆஸ்திரேலிய கூட்டாட்சி பொலிஸார் முறியடித்துள்ளனர். பிலிப்பைன்ஸ் அதிகாரிகளுடன் இணைந்து முன்னெடுக்கப்பட்ட 35 தேடுதல் நடவடிக்கைகளின் மூலம், 6 வயதிற்குட்பட்ட 92 குழந்தைகள் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர்.
இந்தக் கொடூரமான குற்றங்களில் ஈடுபட்ட 13 ஆஸ்திரேலியர்கள் மற்றும் பிலிப்பைன்ஸைச் சேர்ந்த 18 தரகர்களுக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நேர மண்டல ஒற்றுமை மற்றும் மொழி வசதிகளைப் பயன்படுத்தி, இணையதளம் வாயிலாக பணம் செலுத்தி இத்தகைய துஷ்பிரயோகக் காணொளிகளை ஆஸ்திரேலியக் குற்றவாளிகள் பெற்று வந்துள்ளமை அம்பலமாகியுள்ளது. குற்றங்கள் நாட்டிற்கு வெளியே நடந்தாலும், இணையவழித் தடயங்கள் மூலம் குற்றவாளிகளை நிச்சயம் தண்டிப்போம் என AFP கமாண்டர் ஹெலன் ஷ்னைடர் எச்சரித்துள்ளார்.