Thayagam Tamil Radio Australia

மரணதண்டனை கோருவது திருச்சபையின் நிலைப்பாடல்ல – அருட்தந்தை சிரில் காமினி

July 21, 2025

Spread the love

2019 உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதல் தொடர்பில் பொலிஸ் சேவையிலிருந்து நீக்கப்பட்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் நிலாந்த ஜெயவர்த்தனவிற்கு மரணதண்டனை வழங்க வேண்டும் என்பது இலங்கை கத்தோலிக்க திருச்சபையின் நிலைப்பாடல்ல என கொழும்பு மறைமாவட்டத் தகவல்தொடர் இயக்குநர் அருட்தந்தை சிரில் காமினி பெர்ணாண்டோ தெரிவித்துள்ளார்.

இதேவளை, கத்தோலிக்க திருச்சபையின் மக்கள் தொடர்பு இயக்குநராக விளங்கும் அருட்தந்தை ஜூட், நிலாந்த ஜெயவர்த்தனவிற்கு மரணதண்டனை கோரியிருந்தார். இது தொடர்பாக சிரில் காமினி தெரிவிக்கையில், ஜூட் தனிப்பட்ட வகையில் கருத்து தெரிவித்ததையே தாம் பார்க்கின்றோம் என்றும், அது திருச்சபையின் நிலைப்பாடல்ல என்றும் தெளிவுபடுத்தினார்.

அத்துடன், இலங்கை மற்றும் உலகளாவிய கத்தோலிக்க திருச்சபைகள் மரணதண்டனையை ஏற்காத நிலைப்பாட்டை கடைபிடிக்கின்றன என்றும் அவர் கூறினார்.

நிலாந்த ஜெயவர்த்தன, ஜனாதிபதி ஆணைக்குழுவின் பரிந்துரைகளும், உயர்நீதிமன்ற உத்தரவுகளும் அடிப்படையாக வைத்து பணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். அந்த ஆணைக்குழுவின் அனைத்து பரிந்துரைகளையும் அரசு நடைமுறைப்படுத்த வேண்டும் என திருச்சபை எதிர்பார்க்கின்றது.

மேலும், உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் தொடர்பான விசாரணையின் மூலம் மேலும் பல விடயங்கள் வெளிக்கொணரப்படும் எனவும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

அதிகாரிகள் மீள நியமனம் தொடர்பில்:
சிஐடியின் முன்னாள் இயக்குநர் ஷானி அபயசேகர மற்றும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ரவி செனிவிரட்ன ஆகியோர் மீண்டும் பதவிக்கு வரவேண்டும் என்ற எதிர்பார்ப்பு திருச்சபைக்கு இல்லை எனவும் அவர் தெளிவுபடுத்தினார். ஆனால் 2020இல் இடமாற்றம் செய்யப்பட்ட அதிகாரிகளை மீள நியமிக்க வேண்டும் என்பது கார்டினாலின் விருப்பமாக இருந்தது என கூறினார்.