குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் கடந்த 12ஆம் திகதி நடந்த விமான விபத்துக்குப் பின், இடிபாடுகளுக்குள் இருந்து 800 கிராம் (சுமார் 100 பவுன்) தங்க நகைகள் மற்றும் ரூ.80 ஆயிரம் ரொக்கம் மீட்கப்பட்டுள்ளன. இவை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
விபத்து விவரம்:
அகமதாபாத்திலிருந்து லண்டனுக்கு புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் புறப்பட்ட சில நிமிடங்களில், அருகிலிருந்த பி.ஜே. மருத்துவக் கல்லூரி விடுதி கட்டடத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது.
விபத்து நடந்தவுடன் அப்பகுதியை சேர்ந்த கட்டுமான தொழிலதிபர் ராஜூ படேல் தனது குழுவினருடன் விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளார். காயம் அடைந்தவர்களை சேலைகள் மற்றும் படுக்கை விரிப்புகள் கொண்டு உடனடியாக மீட்டு வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்றனர்.
மேலும், இடிபாடுகளில் சிதறி கிடந்த தங்க நகைகள், ரொக்கப்பணம், பாஸ்போர்ட்கள் மற்றும் பகவத் கீதை போன்றவை அழியாமல் பாதுகாத்து, அதனை பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.
இதுகுறித்து உள்துறை இணை மந்திரி ஹர்ஸ் சங்கவி பேசியதாவது, “இவ்விபத்தில் மீட்கப்பட்ட அனைத்து பொருட்களும் ஆவணப்படுத்தப்பட்டு, உரிய சான்றுகளுடன் உரிமையாளர்களின் நெருங்கிய உறவினர்களிடம் விரைவில் ஒப்படைக்கப்படும்” என உறுதியளித்தார்.