தாயகம் தமிழ் ஒலி பரப்புச் சேவை, அவுஸ்திரேலியாவில் இருந்து இயங்கும் ஒரு 24 மணி நேர ஒலிபரப்பு சேவையாகும்.
அவுஸ்திரேலிய தமிழ் சமூகத்தின் சமூக வானொலியாக தாயகம் தமிழ் ஒலிபரப்புச்சேவை 2015ஆம் ஆண்டு மே மாதம் 16ஆம் திகதி தனது ஒலிபரப்புச்சேவையை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்தது.
ஆரம்பத்தில் நிகழ்ச்சித் தயாரிப்புகளில் இணைந்துகொண்ட அனைவரும் அவுஸ்திரேலியாவிலும் இலங்கையிலும் வெவ்வேறான பல வானொலிகளில் ஏற்கெனவே பணியாற்றியவர்கள். பல்வேறு படிநிலைகளில் இருந்தவர்கள். ஒலிபரப்புத்துறையில் ஆர்வமும், அனுபவமும் கொண்டவர்கள். இவர்களை ஒன்றாக இணைத்தவர் விஜய் இராஜகோபால்.
துடிப்பும், துணிச்சலும் கொண்ட இளைஞரான விஜய் – பெருந்தொகைப் பணத்தை முதலீடு செய்யும் வல்லமையும், தெளிவுடன்கூடிய நம்பிக்கையும், அதற்கான திட்டங்களை வகுத்துச் செயற்படுத்தும் ஆற்றலும், கடுமையான உழைப்பும் கொண்டவராக இருந்தார். இவற்றுடன் ஒலிபரப்புத்துறையில் ஆர்வமும், ஒரு தசாப்த கால அனுபவமும் அவருக்கு இருந்தன.
இலங்கையிலிருந்து அவுஸ்திரேலியாவுக்குப் புலம்பெயர்ந்த ஒலிபரப்பிலும், ஒளிபரப்பிலும், பல தசாப்த கால அனுபவம் வாய்ந்த, துறை சார்ந்த முன்னோடிகளில் ஒருவரான எழில்வேந்தனை தாயகம் தமிழ் ஒலிபரப்புச்சேவையின் நிகழ்ச்சிப் பணிப்பாளராக விஜய் நியமனம் செய்தார்.
இவர்களுடன் காரை செல்வராஜா, களுவாஞ்சிக்குடி யோகன், ஹரிபாலா, கருணாகரன், குலேந்திரன், ஞானா அசோகன், சாரதா அமிர்தலிங்கம், மயூரன், சந்தோஷ், செல்வி பக்தா,சத்யபாலன், யூசுஃப் ஆகியோர் அன்றைய தினத்தில் ஒரே குழுமமாக இணைந்தார்கள்.
இவர்கள் அனைவருமே ஒலிபரப்புத்துறையில் பல ஆண்டுக்கால அனுபவம் உடைய திறமைசாலிகள். நல்ல குரல்வளமும், பலவேறு தளங்களிலான இரசனையும், பரந்துபட்ட அறிவும், அவற்றைத் திறம்படப் பிரயோகிக்கும் ஆற்றலும் உடையவர்கள். அவுஸ்திரேலிய தமிழ் சமூகத்துடன் நன்கு ஒட்டி உறவாடுபவர்கள். புதிய தொழில்நுட்பங்களை உடனடியாக உள்வாங்கும் ஆற்றல் பெற்றவர்கள்.
முரளி, நிலவன், யாழவன், துஷி, ரஞ்சித், துஷா, திலீப், உஷா, சந்திரலேகா, கவிதா, வாமதேவா, நிதர்ஷினி , லிண்டா , ரஞ்சகுமார் ஆகியோர் தாயகம் தமிழ் ஒலிபரப்புச்சேவையில் முதலாவது ஆண்டு காலத்தில் கட்டங்கட்டமாக இணைந்து கொண்டவர்கள்.
எழில்வேந்தன், ரஞ்சகுமார், சந்திரலேகா வாமதேவா, வாமதேவா ஆகியோரைத் தவிர மற்றெல்லோரும் துடிப்பான இளைய தலைமுறையைச் சேர்ந்தவர்கள். இளைஞர்களின் ரசனைக்கேற்ப நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்குவதில் இவர்கள் ஆர்வம் காட்டுகின்றார்கள்.
ஆன்மீகம் சார்ந்த நிகழ்ச்சிகளை இந்திரா பரமானந்தன், அருட்சகோதரர் டானியல் ஆகியோர் வழங்குகிறார்கள்.
தாயகம் தமிழ் ஒலிபரப்புச்சேவையின் ஒலிபரப்பாளர்கள், அறிவிப்பாளர்கள், நிகழ்ச்சித் தொகுப்பாளர்கள் அனைவருமே தமது உழைப்பை தொண்டூழியமாகவே மனமுவந்து வழங்குகிறார்கள்.
தாயகம் தமிழ் ஒலிபரப்புச்சேவை ஆகப் பிந்திய எண்ணிம தொழில்நுட்பத்தில் இயங்குகின்றது. டினோ முத்துலிங்கம், ரொபேர்ட் ஆகிய துறைசார் விற்பன்னர்கள் தாயகம் தமிழ் ஒலிபரப்புச்சேவையின் கலையகத்தில் இந்தத் தொழில்நுட்பத்தை நிறுவுவதில் பெரிதும் உழைத்தார்கள். இந்தத் தொழில்நுட்பத்தின் இற்றைப்படுத்தல்களை அவசியமானதும், உசிதமானதுமான தருணங்களில் தாயகம் தமிழ் ஒலிபரப்புச்சேவை தொடர்ச்சியாகச் செய்து வருகின்றது. இதன்பயனாக ஒலித்தெளிவின் தரம் மிக மேம்பட்டதாக அமைவதுடன், நடமாடும் கலையகத்துடன் கூடிய நேரலை நிகழ்ச்சிகளை வழங்குவதில் தாயகம் தமிழ் ஒலிபரப்புச்சேவையினால் திறம்பட இயங்க முடிகின்றது.
தாயகம் தமிழ் ஒலிபரப்புச் சேவையின் மற்றுமொரு விஸ்தரிப்பு நடவடிக்கையாக, மெல்பேர்ன் நகரத்திலிருந்து நேரடி ஒலிபரப்பைச் செய்யக்கூடிய கலையகமொன்று 2016 செப்டெம்பர் 25 ந்திகதி ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது என்பதையும் மகிழ்ச்சியுடன் நேயர்களுக்கு அறியத்தருகிறோம்
தாயகம் தமிழ் ஒலிபரப்புச் சேவையின் நிர்வாகத்துடன் ஈமெயில் மூலம்தொடர்பு கொள்ளலாம்.